http://datuksaravanan.blogspot.com/2014/10/1.html

சிறப்பு பதிவு

Posted by : Unknown October 18, 2014



திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன்

(ஜூலை 7, 1859 – செப்டம்பர் 18, 1945)

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (ஜூலை 7, 1859 – செப்டம்பர் 18, 1945),   ஓர் அரசியல்வாதி, ஒரு சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், ஒரு வழக்குரைஞர், ஒரு பத்திரிகையாளர்,  தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்த போராட்டவாத எனப் பல முகங்களைக் கொண்டவர்.  தாழ்த்தப் பட்டவர் மகா ஜன சபையைத் தோற்றுவித்து, ‘தாழ்த்தப் பட்டவர்’ என்ற மாத இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்து இருக்கிறார்.  தான் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக உழைத்த பெருந்தகை.


செங்கல்பட்டு  மாவட்டத்தில் மதுராந்தகம் அருகில் கோழியாலம் என்னும் கிராமத்தில் சடையன் என்பவருக்கு 7.7.1859-இல் அன்று மகனாகப் பிறந்தார். அந்த மாவட்டத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமை தாங்க மாட்டாமல் தஞ்சைக்குக் குடிபெயர்ந்தது அவருடைய குடும்பம். 

பின்னர் கோவை படிக்க தேர்ந்த போது படித்த 400 பிள்ளைகளில் 10 பேரைத் தவிர மற்றவர்கள் உயர்ச் சாதியினர்.  சாதிகள் மிகத் கடினமாக கவனமாகக் கடைபிடிக்கப் பட்ட காலம். உயர்ச் சாதி மாணவர்களுடன் பழகுவதால் தன்னுடைய சாதி, குடும்பம், இருப்பிடம் ஆகியவை தெரிந்து விட்டால் என்ன நடக்குமோ என்று அஞ்சி படித்து வந்தார். இதை அவரே தனது சுயசரிதையில் எழுதி இருக்கிறார்.


படிப்பு முடித்தவுடன் நீலகிரியில் 1882 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் வணிகப் பணிமனையில் வேலையில் சேர்ந்தார். பிளாவட்ஸ்கி அம்மையார் தியோசாபிகல் சொசைட்டி மூலம் வறுமையாலே வாடுகிற மக்களுக்கு வழி காட்டுகிறேன் என்று சொல்லி மதமாற்றம் செய்தார்கள். ஆனால் இரட்டை மலை சீனிவாசன், அதற்கு ‘நான் இந்துவாகப் பிறந்து விட்டதால் இந்து மதத்திலிருந்து கொண்டே உரிமைக்காகப் போராட வேண்டி கோருவேன்’ என்றார்.

1884-ஆம் ஆண்டு சென்னை அடையாறில் தியோசோடிகல் சொசைட்டியின் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் வங்காள பாபுகளும், பம்பாய் பார்சிகளும், பிராமணர்களும், ஐரோப்பா, அமெரிக்கா, இலங்கை முதலான நாடுகளிலிருந்து பலர் கலந்து கொண்டனர். அப்போது அரசியல் இயக்கம் தோற்றுவிக்க முடிவெடுக்கப்பட்டது. 



இந்தியாவின் பிரச்சினைகள் இரண்டு. இந்தியர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து உரிமைக்காக போராட வேண்டும். இந்தியாவில் பிறந்து வளர்ந்து பூர்வீகக் குடிமக்களாக வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட இனமக்கள், இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமையை எதிர்த்து விடுதலை அடைய வேண்டும். இந்த இரண்டு பிரச்னைகளில் இரட்டைமலை சீனிவாசன் சமுதாய விடுதலைக்கே முக்கியத்துவம் கொடுத்தார்.

சீனிவாசன் 1980-ஆம் ஆண்டு சென்னையில் குடியேறினார். ஒரு வாரப் பத்திரிக்கையை உருவாக்கினார். அதற்குப்  ‘ப**ன்’  என்று பெயர் வைத்தார்.

அந்தப் பத்திரிகை15 ரூபாய்  மூலதனத்துடன் ஆரம்பிக்கப் பட்டது. 1893-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலில் நான்கு பக்கங்கள் கொண்ட மாதாந்திரப் பத்திரிகையாக இரண்டு அணாவாக விலையில் வெளிவந்தது. இரண்டு நாட்களில் 400 பிரதிகள் விற்கப்பட்டன. ஈராண்டுகளுக்கு பிறகு அச்சு இயந்திரசாலை நிறுவப்பட்டது. மூன்று மாதத்திற்குப் பின் வாரந்திரப் பத்திரிகையாக 7 ஆண்டுகள் வெளிவந்தது. 1891-இல்  ‘தாழ்ந்தவர் மகா ஜன சபை’யை  இரட்டை மலை சீனிவாசன் தோற்றுவித்தார். பி. ஆறுமுகம் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



1895-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி சென்னைக்கு வருகை தந்த கவர்னர் ஜெனரல் எல்ஜின் பிரபுவுக்கு மிகப் பெரிய பந்தலிட்டுப் ’தாழ்ந்தவர் மகா ஜன சபை’ வரவேற்றது.  1898-ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் 60ஆவது ஆளுகை விழாவின் போது வாழ்த்துக் கூறி அனுப்பிய செய்தியைப் பார்த்து மகாராணியார் அகம் மகிழ்ந்து 1898-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி பதில் எழுதி இருக்கிறார்.

அக்காலத்தில் பெரும்பாலும் உயர் ஜாதி இந்துகளும், பிராமணர்களும் ஆசிரியர்களாக இருந்தனர். இந்த உயர் ஜாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் செட்யூல்டு மக்களுக்குப் பாடம் சொல்லித் தர முன் வரமாட்டார்கள். இதனால் செட்யூல்டு மாணவர்கள் படிக்க வாய்ப்பு இல்லை.


http://www.tamilheritage.org/old/photoarc/twriters/album/tnadu/p.jeevanandam.jpg

1898 அக்டோபர் 21-ம் தேதி இக்கொடுமையைத் தெளிவாக எழுதி ஆங்கில அரசுக்குத் தெரிவித்தார். இதன் விளைவாகச் சென்னை முனிசிபாலிடி பள்ளிக்கூடம் கட்ட வேண்டி ஆங்கில அரசு உத்தரவு அளித்தது. அதனால் செட்யூல்டு மாணவர்கள் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 65 ஆண்டு காலம் கவனிக்க ஆட்கள் இல்லாமல் 1893-ஆம் ஆண்டு கல்வி கற்பிக்க அரசு முன்வந்தது. பலன் தரவில்லை. கிராம அதிகாரி, வருவாய்த்துறை தாசில்தார், துணை ஆட்சியாளர் போன்றவர்கள் முட்டுகட்டை போட்டனர்.

1893-ஆம் ஆண்டு ‘ப**ன்’ பத்திரிகையில் இக்கொடுமையை பற்றி விளக்கமாக எழுதிய காரணத்தால் வருடா வருடம்  30 லட்சம் ரூபாய் கல்விக்காகச் செலவு செய்ய அரசினர் தீர்மானித்தனர். அரசாங்கப் பள்ளிகளை சரிவர பராமரிக்க முடியாமல் சில பள்ளிகள் மூடப்பட்டன. ஆனால் மிஷனரி பள்ளிகள் ஏராளமாகத் திறக்கப்பட்டன. கல்வி வளர்ச்சி என்ற பெயரில் மதமாற்றமும் செய்யப்பட்டது.



1904-இல் தென் ஆப்பிரிக்காவின் நேட்டாலில் தங்கியிருந்த போது பீட்டரின் உதவியால் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு காந்திக்கு மொழிபெயர்ப்பாளராக விளங்கினார். 1923-ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தின் மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருந்தபோது ‘ரெவின்யூ இன்ஸ்பெக்டர்’ பதவி ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தரவேண்டும் என்று கோரினார்.

கிராமங்களில் படித்த, பணம் படைத்தவர்கள் படிக்காத அப்பாவி மக்கள் மீது தங்களது ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களையே ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக நியமனம் செய்வது என்பது உரிமைக்காகக் குரல் கொடுக்காதவர்களாகத் தென்படுகிறது. எனவே தனி வாக்குரிமையின்படி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளை அரசுக்குத் தெரிவிக்க ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளையே தேர்ந்தெடுப்பது நலம் என்று கருதினார்.

1926-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி ‘ராவ்சாகிப்’ பட்டம் அளிக்கப்பட்டது. 1930 ஜுன் மாதம் 6-ம் தேதி திவான்பகதூர் பட்டமும் திராவிடமணி என்ற பட்டமும் அளிக்கப்பட்டன. அதே ஆண்டு நவம்பர் 12-ம் தேதி லண்டன் மாநகரில் முதல் வட்டமேஜை மாநாடு கூடியது.

இதில் இரட்டைமலை சீனிவாசன், ஜெயகர், அம்பேத்கர், ஆகாகான், ஹென்றிகிட்னி, க்யூபார்ட்கார், பன்னீர்செல்வம், ராமசாமி முதலியார், பாத்ரோ, முகமது அலி ஜின்னா, பிக்கானீர் மகாராஜா, சீனிவாச சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர். 


காந்தி சிறையில் இருந்ததால் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளவில்லை. இரண்டு வட்டமேஜை மாநாடுகள் முடிந்து 1932-இல் ஆகஸ்ட் 17-ல் Communal award வெளியிடப்பட்டது.

”செட்யூல்டு இன மக்கள் அரசியல் சுதந்திரம் கிடைப்பது பலன் தராது. தனி வாக்குரிமை மூலம் செட்யூல்டு இன வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஏற்படும். செட்யூல்டு மக்கள் இந்துக்கள் பட்டியலில் அடங்காது. பண்டிகை நாட்களில் சாராயக் கடைகளை மூட வேண்டும். வேலை செய்தால் தானியங்களுக்குப் பதிலாகப் பணமாகக் கொடுக்க வேண்டும்” என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்தார்.

1939 செப்டம்பர் 17-ம் தேதி சென்னை சிந்தாதிரிப் பேட்டை, நேப்பியர் பூங்காவில் செட்யூல்டு மக்களைக் கூட்டி இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

“நாங்கள் கணக்கிட முடியாத வருடங்களாகக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றோம். எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை. எதிர்காலத்தில் எங்கள் இனம் சமத்துவமாகவும், சமாதானத்துடனும் வாழ எண்ணுகிறது. எங்களுடைய முன்னேற்றத்தில் மற்றவர்கள் குறுக்கிட்டால் நாங்கள் சகிக்க மாட்டோம். இனி மேலும் நாங்கள் எவ்விதக் கொடுமையையும் ஏற்க மாட்டோம். எங்களுடைய கீழான நிலைமைக்கு அவர்களிடம் உள்ள அமைதியும், அன்புக் குணமுமே காரணமாகும்” என 1895 அக்டோபர் 7-இல் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சூளுரைத்தார்.

இத்தகைய பெருமகனார் 1945 செப்டம்பர் 18, சென்னை, பெரியமேடு பகுதியில் உயிர் நீத்தார். தாழ்த்தப் பட்ட மக்களின் தற்போதைய உயர்வுக்கு முன்னோடியாக இருந்து செயல் பட்டவர் இரட்டைமலை சீனிவாசன். தீண்டாமையை ஒழிக்கும் தர்மத்தை விரும்புவோருக்கு
இரட்டைமலை சீனிவாசன் என்றும் நினைவில் வாழும் மனிதராக வாழ்கின்றார்.

Leave a Reply

உங்கள் கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © டத்தோ எம். சரவணன் - Date A Live - Powered by Blogger - வரைகலை தயாரிப்பு: மலாக்கா முத்துக்கிருஷ்ணன் +06 012 9767 462
-